சக்ரா பவுண்டேசன், இந்தியா முழுவதும் “தியாகப் பெருஞ்சுவர் (Tribute wall)” அமைக்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் பத்திரிக்கையாளர், இப்போது திரைப்பட இயக்குனரான ஏ.ஆர்.ராஜசேகர் சக்ரா பவுண்டேசன் நிறுவனர் – தலைவராக இருந்து இந்த பணிகளை செய்து வருகிறார்.
புதுச்சேரியில் இவர் அமைத்த தியாகப் பெருஞ்சுவர் (Tribute wall) குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி அவரை ஊக்கப்படுத்தி நாடு முழுவதும் 75 இடங்களில் இதை வையுங்கள் என்று அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் முதல் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கும் பணி கடந்த செப்டம்பர் மாதம், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் கேந்திர வளாகத்தில், பூமி பூஜையுடன் தொடங்கியது.
இன்று (19-03-2024) கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுதந்திர போராட்ட வீரர்களின் குறிப்புகள் அடங்கிய கல் தியாக பெருஞ்சுவரில் பதிக்கப்பட்டது.
![விவேகனந்த கேந்திர அகில பாரத தலைவர் எ.பாலகிருஷ்ணன் நிகழ்வில்](https://iyaltamil.com/wp-content/uploads/2024/03/126A6697-300x200.jpg)
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விவேகனந்த கேந்திர அகில பாரத தலைவர் எ.பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியை துவக்கிவைத்து, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர் பதித்த முதல் கல்லை தியாக பெருஞ்சுவரில் பதித்தார்.
![நல்லையா ராஜகுமார்நிகழ்வில்...](https://iyaltamil.com/wp-content/uploads/2024/03/126A6742-300x200.jpg)
நேதாஜியின் இந்திய தேசிய படை (INA)-ல் பணியாற்றிய களக்காடு நல்லையாவின் மகன் நல்லையா ராஜகுமார் இரண்டாவது கல்லை தியாக பெருஞ்சுவரில் பதித்தார்.
![தமிழ் முழக்கப்பேரவை தலைவர் சு.செல்லப்பா நிகழ்வில்...](https://iyaltamil.com/wp-content/uploads/2024/03/126A6720-300x200.jpg)
தமிழ் முழக்கப்பேரவை தலைவர் சு.செல்லப்பா மூன்றாவது கல்லை தியாக பெருஞ்சுவரில் பதித்தார். அவர் கூறுகையில், என்னுடைய 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பல்வேறு தியாகிகளை தேடி தேடி அவர்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்தி பாராட்டி வந்தேன்.. மாதந்தோறும் நெல்லை சைவ சபையில் தியாகிகளை நினைவு கூர்ந்து நிகழ்சிகளை நடத்தி வருகிறேன்… என்னுடைய வாழ்நாளில் இத்தகைய தியாகப் பெருஞ்சுவர் எழுவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். சக்ரா அறக்கட்டளை நாடுமுழுவதும் இந்த பணிகளை முன்னெடுப்பது பெருமைக்குரியது என்றார்.
![தமிழ்நாடு மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவன தலைவர் புத்தேரி சகாயம் நிகழ்வில்](https://iyaltamil.com/wp-content/uploads/2024/03/126A6779-300x200.jpg)
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவன தலைவர் புத்தேரி சகாயம், என்.வி.கே.எஸ். பள்ளி செயலாளர் கிருஸ்ணகுமார், அருமனை கிரிஸ்குமார், தொழிலதிபர் ஆறுமுகம் பிள்ளை, ஜாஸ்மின்ராஜ், குலசேகரம்புதூர் சமூக சேவகர் கண்ணபிரான், தொழிலதிபர் சிவமுருக ஆதித்தன், தக்கலை சுத்திர போராட்ட தியாகி சிவன்பிள்ளை மகன் இராமச்சந்திரன் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சுத்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டு தியாகப்பெருஞ்சுவரில் கல் பதித்தனர்.
![தியாகப் பெருஞ்சுவர் ( Tribute wall ) நிகழ்வில்](https://iyaltamil.com/wp-content/uploads/2024/03/126A6648-300x200.jpg)
தமிழ்முழக்கப் பேரவை இணை செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கவிஞர் சுப்பையா கலந்து கொண்டனர். கவிஞர் சுப்பையா பணிகளை பாராட்டி வாழ்த்து பாடல் பாடினார்.
சக்ரா பவுண்டேசன் நிறுவனத்தலைவர் ஏ.ஆர்.ராஜசேகர் அனைவரையும் வரவேற்றார். துணைத்தலைவர் பி.கோவர்த்தனன் வருகைதந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.