மக்களவை தேர்தலில் வாக்களிப்பதை ஊக்கமளிக்கும் வகையில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, சிக்கிம் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதியும், இதர மாநிலங்களுக்கு ஜூன் 4 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தும் நோக்கில், தேர்தல் ஆணையம் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது . மேலும், அனைவரும் வாக்களிக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விடுமுறை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு விடுமுறை தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தெரிவித்ததாவது, வாக்களிக்கும் தினத்தன்று ஏப்ரல் 19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவித்தது.
அரசு பணியாளர்கள், தனியார் துறையைச் சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பிபிஓ, கடைகளில் பணியாற்றும் தினக்கூலிகள், தற்காலிக பணியாளர்கள் தங்கள்சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஊதியத்துடன் விடுமுறையுடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெரிவிக்கிறது. ஆகையால் ஏப்ரல் 19-ம் தேதியன்று, இந்த உத்தரவை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் எனவும், அனைத்து நிறுவனங்களும் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் பின்பற்றும் வகையில் கட்டுப்பாட்டு அறையை தொடங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.