நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்துக்குள்ளானதில் 4 இளைஞர்கள் பலியாகினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஸ்ரீராம் பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 5 இளைஞர்கள் காரில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
குமாரபாளையம் அடுத்த குப்பாண்டபாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தனசேகரன், லோகேஷ், சிவக்குமார் மற்றும் கவின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்ரீதர் என்ற இளைஞர் மட்டும் இந்த விபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த குமாரபாளையம் போலீசார், உடல்களை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.