ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
94 வயதான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீர் பாதை தொற்று பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவர் ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இம்மாத தொடக்கத்தில் அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி, வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள இரங்கல் குறிப்பில்,
“மதிப்பிற்குரிய தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ், ஆன்மீகம் மற்றும் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். எண்ணற்றோர் இதயங்களிலும் மனங்களிலும் அழியாத தடம் பதித்தவர். அவரது இரக்கமும் ஞானமும் பல தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். பல வருடங்களாக அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. 2020-ல் பேலூர் மடத்திற்கு நான் அவருடன் உரையாடியதை நினைவு இந்த இடத்தில் நினைவுகூருகிறேன். சில வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தேன். பேலூர் மடத்தின் பக்தர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.
![சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி](https://iyaltamil.com/wp-content/uploads/2024/03/2-2-300x186.jpg)