கோவை அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து மூக்கனூர் செல்லும் சாலையில் விக்ரம் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான அன்னூர் காட்டன் மில்ஸ் என்ற தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை நூற்பாலை குடோனிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பே காற்றின் வேகத்தால் தீ நூற்பாலை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.