தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நேற்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி மூலம் வேட்பு மனு பரிசீலனை இன்று (மார்ச் 28) செய்யப்பட்டது.
கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு மீதும் இன்று பரிசீலனை செய்யப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார், மற்றும் அதிகாரிகள் தலைமையில் வேட்பாளர்கள், வழக்கறிஞர்கள் முன்னிலையில் இந்த பரிசீலனை நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனையின் போது பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்ககப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்நிலையில், அண்ணாமலை வேட்பு மனுவில் சில தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. முறையாக நிரப்பப்படவில்லை எனக் கூறி அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டுமென என அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
“கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரு வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் ‘India Court Fee’ பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இன்னொரு வேட்புமனு Indian Non Judicial பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்டது” எனக்கூறி அண்ணாமலையின் வேட்புமனு தாக்கல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்தி குமார்.