ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் ஜுலியன் அசாஞ்சே (52) கடந்த 2006-ம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010-ல் ஆப்கானிஸ்தான், இராக் போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அம்பலப்படுத்தினார் .இதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் என பல ரகசியங்கள் வெளியே வந்தன.
கடந்த 2010-ம் ஆண்டு நவம்பரில் அவர் மீது, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். 2019-ல் ஈகுவடார் அரசு அவருக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலீஸார், ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது என 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022 ஜூனில் ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான வழக்கு லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப், நேற்று பிறப்பித்த உத்தரவில், “ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்க மாட்டோம் என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவரது கருத்து சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அமெரிக்க குடிமகனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உரிமைகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அசாஞ்சேவுக்கும் வழங்க வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். இவை குறித்து 3 வாரங்களுக்குள் அமெரிக்க அரசு பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ச்சியாக விசாரணை நடைபெறாது. அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கோரும் வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அசாஞ்சேவுக்கு அனுமதி வழங்கப்படும்” என்று உத்தரவிட்டார்.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை மே 20-க்கு ஒத்தி வைக்கப் பட்டது. இதன்மூலம், அசாஞ்சேவின் நாடு கடத்தும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஜூலியன் அசாஞ்சேவின் மனைவி ஸ்டெல்லா, “எனது கணவருக்கு தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைத்திருக்கிறது. இந்த வழக்கை அமெரிக்க அரசு கைவிட வேண்டும். இதற்கான உத்தரவை அதிபர் பைடன் பிறப்பிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். “அசாஞ்சே மீதான வழக்குகளை அமெரிக்க அரசு கைவிட வேண்டும்” என்று பிரிட்டனின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கார்பின் கோரிக்கை விடுத்துள்ளார்.