டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் இடது சாரி கூட்டணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.
கடைசியாக கடந்த 2019-ல் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பின் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கோவிட் பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மாணவர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இத்தேர்தலில் அனைத்திந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு, இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய மாணவர்கூட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய இடதுசாரி கூட்டணி மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் இணைந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்ஆகியவை இடையே கடும் போட்டி நிலவியது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அனைத்திந்திய மாணவர் சங்க தலைவர் தனஞ்ஜெய் 2,598 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுத்தனர். இவரை எதிர்த்து போட்டியிட்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உமேஷ் அஜ்மீரா 1,676 வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த விஜித் கோஷ் 2,409 வாக்குகள் பெற்று துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பொதுசெயலாளர் தேர்தலில், 2,887 வாக்குகள் பெற்று பிரியான்ஷி ஆர்யா வெற்றி பெற்றுள்ளார். இணை செயலாளராக 2,574 வாக்குகள் பெற்று மோ சஜித் வெற்றி பெற்றுள்ளார்.